Skip to main content

பரம எருசலமே பரலோகம் விட்டிறங்குதே


பரம எருசலமே
பரலோகம் விட்டிறங்குதே
அலங்கார மண வாட்டியாய்
அழகாக ஜொலித்திடுதே
ஆமென் அல்லேலூயா - (4) (லா லா லா லா லா லா)

எருசலமே கோழி தன் குஞ்சுகளை
ஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன்
தாய் பறவை துடித்திடும் பாசம் கண்டேன்
தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன்
கனிவான எருசலேமே - பரம

ஜீவ தேவன் நகரினில் குடிபுகுந்தேன்
சீயோன் மலைச் சீருக்குச் சொந்தமானேன்
நீதி தேவன் நீன்னடி சிரம் புதைத்தேன்
நீதி மான்கள் ஆவியில் மருவி நின்றேன்
மேலான எருசலேமே - பரம

சர்வ சங்க சபையினில் அங்கமானேன்
சர்வலோக நடுவரின் அருகில் வந்தேன்
பரிந்துரைக்கும் இரத்தத்தில் மூழ்கி நின்றேன்
பரிவாரமாம் தூதர்கள் ஆடி நின்றேன்
ஆஹா என் எருசலேமே - பரம

விடுதலையே விடுதலை விடுதலையே
லோகமதின் மோகத்தில் விடுதலையே
நானே யெனும் சுயவாழ்வில் விடுதலையே
நாதர் தனில் வாழ்வதால் விடுதலையே
சுயாதீன எருசலேமே - பரம

கண்ணீர் யாவும் கனிவோடு துடைத்திடுவார்
எண்ணமதின் ஏக்கங்கள் தீர்த்திடுவார்
மரணமில்லை மன நோயின் துயரமில்லை
அலறலில்லை அழுகையின் சோகமில்லை
தலை நகராம் எருசலேமே - பரம