Skip to main content

பாரீர் கெத்சமெனே பூங்காவில் என் நேசரையே பாவி எனக்காய் வேண்டுதல் செய்திடும்


பாரீர் கெத்சமெனே பூங்காவில் என் நேசரையே
பாவி எனக்காய் வேண்டுதல் செய்திடும்
சத்தம் தொனித்திடுதே

தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய்
தேவாதி தேவன் ஏக சுதன் படும்பாடுகள் எனக்காய் - பாரீர்

அப்பா இப்பாத்திரமே நீக்கும் நின் சித்தமானால்
எப்படியும் உம் சித்தம் செய்ய என்னைத் தத்தம் செய்தேன் - பாரீர்
என்றாரே

இரத்தத்தின் வேர்வையாலே மெத்தவுமே நனைந்தே
இம்மானுவேலன் உள்ளம் உருகியே வேண்டுதல் செய்தனரே - பாரீர்

மும்முறை தரை மீதே தாங்கொண்ணா வேதனையால்
முன்னவர் தாமே வீழ்ந்து ஜெபித்தாரே பாதகர் மீட்புறவே - பாரீர்

அன்பின் அருள் மொழியால் ஆறுதல் அளிப்பவர்
துன்ப வேளையில் தேற்றுவாரின்றியே நொந்து அலறுகிறார் - பாரீர்

என்னையும் தம்மைப் போல மாற்றும் இம்மா நேசத்தை
எண்ணியெண்ணியே உள்ளங் கனிந்து நான் என்றும்
புகழ்ந்திடுவேன் - பாரீர்