Skip to main content

கர்த்தரின் பல நன்மைகளை எண்ணி கருத்துடனே துதித்திடுவேன்


கர்த்தரின் பல நன்மைகளை எண்ணி
கருத்துடனே துதித்திடுவேன்
களி கூர்ந்து மகிழ்ந்திடுவேன்

நடந்து வந்த வழிகளெல்லாம்
நல்லவரின் கரம் சுமந்ததுவே
ஆறுதல் ஆதரவும் அளித்தாரே
ஆபத்திலே உற்ற துணையவரே

வஞ்சகன் வீசின வலைகளிலே
சிக்கிடாமலே பாதுகாத்தனரே
தாயினும் மேலாக நேசித்தாரே
தாரணியில் என் தஞ்சமும் அவரே

ஜெயமான பாதைகளில் செல்ல
சேனை வீரராய் முன் செல்லுவாரே
கண்ணை என் மீது வைத்திடுவாரே
கற்பிப்பாரே தேவ ஆலோசனைகள்

தூயவரின் அன்பினிலே நாளும் வளர
தூய ஜீவியத்திலும் முன்னேற
தருவாரே தினமும் கிருபைகள்
தயங்காது பாடு சகித்திடவே

மரண இருளில் நடந்தாலும்
பரமன் என்னோடே இருப்பாரே
பரத்திலே உண்டு பல வீடே
சிகரத்தில் நிற்பேன் அவரோடே